பாடல் 24 - மணமகனும் மணமகளும் புறப்படுதல். Up
அடிகள் 1 - 264 : மணமகன் மணமகளை எவ்விதம் நடத்த வேண்டும்
என்றும் அவளைக் கொடுமைப் படுத்தக் கூடாது என்றும் மணமகனுக்கு
அறிவுரை கூறுதல்.
அடிகள் 265 - 296 : ஒரு முதியவன் தனது மனைவியை, தன்னை விரும்பும்படி
எப்படி மாற்றினான் என்ற அனுபவத்தைக் கூறுதல்.
அடிகள் 297 - 462 : மணமகள் தனது பிறந்தகத்தை விட்டு நிரந்தரமாகப்
பிரிவதை உணர்ந்து அனைவரிடமும் கண்ணீருடன் விடை பெறுகிறாள்.
அடிகள் 463 - 528 : இல்மரினன் மணமகளைச் சறுக்கு வண்டியில் ஏற்றிப்
பயணித்து மூன்றாம் நாள் மாலை வீட்டை அடைகிறான்.
அரிவைக் கிப்போ(து) அறிவுரை கிடைத்தது
மணமகள் தனக்கு வழிமுறை கிடைத்தது;
அரியஎன் சோதரற் கடுத்துநான் சொல்வேன்
வாயினால் எனது மாப்பிளைக் குரைப்பேன்:
"மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
சோதர னைவிடத் தூயசீ ருடையரே!
அன்னையின் மக்களில் அன்புமிக் குடையரே!
பிதாபெற்ற மகவில் பெரும்பண்பு உடையரே!
நான்மொழி கையிலே நன்குநீர் கேட்பீர்,
நான்மொழி கையிலும் நான்உரைக் கையிலும், 10
இசைபாடு மிச்சிறு **இளம்புள் பற்றி,
கொண்ட நின்சிறிய கோழியைப் பற்றி.
நவிலுக மாப்பிளாய், நன்றிநின் அதிர்ஷ்டத்(துக்கு)
நல்லதோர் பேற்றின் நலம்கிடைத் ததற்கு
நன்றி புகல்கையில் நன்கதைக் கூறும்:
நலத்தையே பெற்றீர் நலம்சந் தித்தீர்
படைத்தவன் உமக்குப் பயனுள தளித்தான்
இரக்கமுற் றிடுமவன் இனியதொன் றீந்தான்!
மனையாள் பிதா(வு)க்கு மனம்நிறை நன்றிசொல்(க)
அதற்கும்மே லாக அன்னைக்கு நன்றிசொல்(க) 20
பெண்ணையித் தகையளாய்ப் பேணிய செயற்கு
மணப்பெண்இத் தகையளாய் மாண்பொடீன் றதற்கு.
இருப்பவள் அருகில் இளம்புனி தப்பெண்
உம்முடன் இணைந்தவள் உள்ளொளி நிறைந்தவள்
வாய்த்தவள் உமக்கு வண்ணமாம் வெண்மையள்
அழகுளாள் நும்காவ லதனுளே வந்தவள்
உன்மருங் கிருப்பவள் உறுதிமிக் குடையவள்
காரிகை நின்அயல் கன்னமே சிவந்தவள்
போரடி களத்திலே புதுப்பலப் பாவையள்
வைக்கோல்தூற் றிடவ(ல்)ல வனப்பான வனிதையள் 30
துணிமணி அலம்பலில் துடிப்பான தையலாள்
துணிகளை வெண்மையாய்த் தோய்த்திடும் திறனுளாள்
நூல்நூற்றல் நுட்பமே மேலாகக் கற்றுளாள்
கருமமாம் துணிநெய்தல் தரமிகச் செயவலள்.
கைத்தறி அச்சொலி கனதொலை ஒலிக்கும்
குயிலொன்று மலையுச்சி கூவிடும் ஒலிபோல்;
நுவல்மகள் கைத்தறி நூனாழி கலவெனும்
காட்டுளே ஒருகீரி கலகலத் திடல்போல்;
நூல்சுற்றும் சில்சுற்றி நுட்பமாய்ச் சுழலும்
அணில்வாயில் சுழல்கின்ற **கூம்புக்காய் அதுபோல்; 40
அக்கிரா மத்தோர் அமைதியாய்த் துயின்றிலர்
நாட்டின் மாந்தர்கள் நன்றாய்த் துயின்றிலர்
சட்டம்கைத் தறியினில் சடசட ஒலியினால்
நுவல்மகள் கைத்தறி நூனாழி ஓசையால்.
மாப்பிள்ளை யாரே, வளர்இள மையரே!
கணவரா னவரில் கவினுடை யவரே!
அரிவாள் கூர்மையாய் ஆக்குவீர் உருக்கில்
சிறப்புமிக் கொருபிடி யதற்கிணைத் திடுவீர்
வைப்பீர் செதுக்கி வாயிற் புறமதை
மரத்துக் கட்டையில் அடித்திறுக் கிடுவீர்; 50
பகலொளி வந்து பட்டொளிர் நேரம்
புற்றரை நிலத்துப் போவீர் மாதுடன்
பார்ப்பீர் அங்கே படபடக் கும்புல்
கடின வைக்கோல் கலகலப் பதனை
கிளர்கோ ரைப்புல் கிலுகிலுப் பதனை
**காரப் பூண்டுகள் கவின்மெது வசைவதை
மேட்டு நிலங்கள் மிகுமட்ட முறலை
நாற்றுச் செடிகள் நனிமுறி படலை.
மற்றொரு நாளிவ் வாறே வந்ததும்
நல்ல நூனாழி நங்கைக் களிப்பீர் 60
அடர்பா(வு) பலகையும் அளிப்பீர் பொருத்தமாய்
தரப்பா வோடுஞ் சட்டமும் தருவீர்
மெல்லநற் செதுக்கிய மிதிக்கும் பலகையும்
கைத்தறிக் கான கனபொருள் தருவீர்
பூவையைக் கைத்தறிப் பொறியிலே நிறுத்தி
பாவோடு பலகையைப் பைங்கரத் தளிப்பீர்:
அப்போநூ னாழி அசையும் ஒலியெழும்
கைத்தறிப் பொறியும் கடகடத் தோடும்
கிராமம் கைத்தறிச் சத்தம் கேட்கும்
அதையும் மிஞ்சும்நூ னாழியின் ஓசை. 70
வயதுறும் பெண்கள் வியப்பாய் நினைப்பர்
கிராமப் பெண்கள் கேட்பர்இவ் வாறு:
'நேராய் யார்துணி நெய்வ(து) இப்போது?'
தகுந்ததோர் பதிலைத் தருவிர்அப் போது:
'சொந்தஎன் அன்பவள் துணிகள் நெய்கிறாள்
இதயத் தினியவள் எழுப்புவள் ஓசை;
எங்கெனும் துணியில் இயைஒழுங் கிலதா
அசைவில்நூ னாழி இழைதப் பியதா?'
'இல்லை துணியில் ஒழுங்கழிந் திலது
அசைவில்நூ னாழி இழைதப் பியதிலை: 80
நேர்நிலா மகளார் நெய்தது போல
பெருங்கதிர் மகளார் பின்னிய வாறு
**தாரகைக் குலத்தின் தரமார் கைத்திறன்
விண்மீன் மகளின் மிகுவனப் புச்செயல்.'
மாப்பிள்ளை யாரே, மதிப்புளச் சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்போ திங்கிருந்(து) எழப்போ கின்றீர்
இப்போ திங்கிருந்(து) எழுகிறீர் பயணம்
உமக்கு வாய்த்த ஒளிரிளம் பெண்ணுடன்
அழகு படைத்த அருங்கோ ழியுடன் 90
**சிட்டுக் குருவியை விட்டிடீர் அலைய
இசைபாடு மிந்த இன்சிறு **பறவையை
நன்நீர்க் கரைவழி நகரவிடாதீர்
வேலி மூலையில் விடாதீர் செல்ல
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை நிலத்திலும் படர விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
நவில்நீர்க் கரைவழி நகர்ந்ததே யில்லை
வேலியின் மூலைக் கேகிய தில்லை 100
அடிமரக் கட்டைகள் அமைந்த இடத்திலும்
பாறை நிலத்திலும் படர்ந்ததே யில்லை.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
இப்பெண் உமதவள் ஏகவி டாதீர்
அன்புக் குரியளை அகலவி டாதீர்
திகழ்கோடி மூலையில் திரியவி டாதீர்
அமைகோடி மூலையில் அலைய விடாதீர்.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
முந்திய அன்னையின் இல்லத்தி லில்லை 110
திகழ்மூலை கோடியில் திரிந்ததே யில்லை
அமைகோடி மூலையில் அலைந்ததே யில்லை;
இருப்பாள் சாளரப் பீடம்மெப் போதும்
இருப்பாள் நிலத்தில் எழில்தரை மத்தியில்
மாலை தந்தையின் மகிழ்ச்சி வடிவாய்
அதிகாலை அன்னை அன்புமா யிருப்பாள்.
அதிர்ஷ்டமில் கணவ அனுதினம் வேண்டாம்
இந்தக் கோழியை என்றும் அனுப்புதல்
**சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில் 120
**வைக்கோல் அரைத்துமா ரொட்டி சுடற்கு
இடித்திடத் தேவ தாரெழிற் பட்டை.
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
சேம்பங் கிழங்கு தேர்ந்திடிக் கும்உரல்
மரப்பட்டை ரொட்டிக் கரைக்கும் மடைத்தொழில்
வைக்கோல் அரைத்துமா ரொட்டி சுடற்கு
பட்டைத்தா ரிடிக்கவும் படர்ந்தன ளேயிலை.
ஆயினும் நீரிக் கோழியை அனுப்பலாம்
குவியலாய்த் தானியம் குவிந்துள்ள மேடு 130
ஒருகொள் கலத்தை வெறுமையாக் கற்கும்
தானியக் கலத்தில் தானியம் பெறற்கும்
பருமனாய் ரொட்டி பலசுட் டெடுக்கவும்
தானியப் பானம் தரமாய் வடிக்கவும்
தட்டிமாக் கோதுமை ரொட்டிகள் சுடவும்
உணவுக்கு மாப்பசை அமைக்கவு மனுப்பலாம்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
எங்கள்இவ் வாத்துக் கிந்நிலை வேண்டாம்
ஏங்கித் துயருற் றிவளழ வேண்டாம் 140
ஒருக்கால் துயருறும் ஒருநிலை வந்தால்
வனிதைக் கேக்கமும் வருத்தமும் வந்தால்
புகல்பழுப் புப்பரி பூட்டுமேர்க் காலில்
அல்லது வெள்ளைக் கலங்கா ரம்செய்(க)
தந்தையின் இல்லம் தையலைக் கொணர்க
அவளே பழகிய அன்னையின் இல்லம்.
இக்கோ ழிக்கு இந்நிலை வேண்டாம்
இசைபாடு **பறவைக் கெப்போதும் வேண்டாம்
நீர்பெறும் அடிமையாய் நினைக்கவும் வேண்டாம்
கூலிக்கு வந்தளாய்க் கொள்ளவும் வேண்டாம் 150
தடைபோட வேண்டாம் களஞ்சியக் கூடம்
பூட்டவும் வேண்டாம் புறவெளி நிறுத்தி!
என்றுமே தந்தையின் இல்லத்தி லில்லை
தொடரன் பன்னையின் தோப்பிலும் இல்லை
தம்முடை அடிமையென் றெண்ணிய தில்லை
கூலிக்கு வந்ததாய்க் கொண்டது மில்லை
தடைபோட்ட தில்லைக் களஞ்சியக் கூடம்
பூட்டவு மில்லைப் புறவெளி நிறுத்தி.
கோதுமை ரொட்டியைக் கொள்துண் டாக்குவள்
கோழிமுட் டைகளைத் தேடிப் பொறுக்குவள் 160
பாற்கலங் களையெலாம் பார்த்தே அத்துடன்
கலங்களில் மதுவையும் கண்கா ணிப்பாள்
காலையில் திறபடும் களஞ்சியக் கூடம்
மாலையில் பூட்டுதல் மட்டுமே வழக்கமாம்.
மாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர!
கணவரா னவரில் கவின்படைத் தவரே!
பக்குவ மாகவே பார்த்தால் பெண்ணைநீர்
நினைவில்அவ் வளவும் நிற்கும் நன்மையாய்:
மாமனார் வீடு நீர்வரும் வேளையில்
அன்பு மாமியின் அகம்வரு வேளையில் 170
உண்டிடச் சிறந்த உணவுகள் கிடைக்கும்
உண்டிட உணவுடன் அருந்திடப் பானமும்
ஆனஉம் குதிரைக் கவிழ்த்தலங் காரம்
தொழுவம் அதனைத் தொட்டே கொணர்ந்து
உண்ணவும் அருந்தவும் உகந்தெலா மீந்து
**உதவலாம் கூலப்புல் லரிசியோர் பெட்டியும்.
எங்கள் பெண் பற்றி இவ்விதம் சொ(ல்)லாதீர்
இசைபாடு மெம்சிறு **பறவையைப் பற்றி
உறவினர் அவட்கு உற்றிலர் எ(ன்)னாதீர்
உயர்சுற் றத்தார் இலர்என் றுரையீர்; 180
எமதிப் பெண்மணிக் கிருக்கிறா ரனைவரும்
உயர்சுற் றத்தார் உறுபெரு மினசனம்
**ஒருபடி **யவரை உயர்விதை விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருமணி மட்டுமே!
ஒருபடி சணல்விதை உவந்தே விதைத்தால்
ஒருவர் பெறுவது ஒருநார் மட்டுமே!
அதிர்ஷ்டமில் மணாள, அறவே வேண்டாம்!
சுந்தரி இவளைத் துன்புறுத் தாதீர்
அடிமைச் சவுக்கால் அறிவுரை வேண்டாம்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வேண்டாம் 190
ஐந்துசாட் டைகளால் அழவிட வேண்டாம்
குடிசையின் வாசலில் குழறவைக் காதீர்
என்றுமே இவளுக் கிவ்விதம் நேர்ந்ததில(து)
தாதையின் வீட்டிலோர் போதுமே நிகழ்ந்தில(து)
அடிமைச் சவுக்கால் அறிவுரை புகன்றிலர்
தோற்சவுக் காலிவள் தேம்பிட வைத்திலர்
ஐந்துசாட் டைகளால் அழவும் வைத்திலர்
குடிசையின் வாசலில் குழறவும் வைத்திலர்.
அவளின் முன்னால் சுவர்போல் நிற்பீர்
நிற்பீர் கதவின் நிலைபோல் அவள்முன் 200
அடிக்கும் மாமியின் அல்லல்வை யாதீர்
மாமனார் ஏச்சால் மலங்கவைக் காதீர்
வேறெவ ராலும் வெறுக்கச்செய் யாதீர்
அயல்வீட் டார்குறை கூறவை யாதீர்!
அடிக்கலாம் என்று அறைந்தனர் வீட்டார்
துன்புறுத் தலாமெனச் சொல்லினர் மறுசிலர்
ஆயினும் பெண்ணைநீர் அடிக்கவே முடியா
ஏழையாள் துன்புற இதயம்நீர் தாங்கீர்
ஆண்டொரு மூன்று அவட்காய் இருந்தீர்
வெகுநாள் அவளை விரும்(பி)எதிர் பார்த்தீர். 210
மங்கைக் கறிவுரை வழங்குக, மாப்பிள்ளாய்!
**அப்பிள் பழம்போல் அவள்கற் பிப்பீர்
அரிவைக் கமளி(யில்)ஆ லோசனை புகல்வீர்
கதவின் பின்புறம் கற்பிப் பீர்பெண்
ஓராண்(டு) காலம் ஓரிடம் பயிற்றுவீர்
வாய்ச்சொலால் முதலாம் ஆண்டுகற் பிப்பீர்
இரண்டாம் ஆண்டுகண் சிமிட்டால் புகட்டுவீர்
மூன்றில் கால்நிலத் தூன்றிப் பயிற்றுவீர்.
காரிகை இனைத்தையும் கவன மெடாமல்
அவதான மின்றி அசட்டை செய் திட்டால் 220
**கோரை இனத்திலோர் கொழும்புல் பறிப்பீர்
**பரிவால் ஒன்றைப் பற்றையில் ஒடிப்பீர்
அதைக்கொண் டவளுக் கறிவுரை புகல்வீர்
நான்காம் வருடம் நாரிக் கோதுவீர்
பரிவால் கொண்டு பைய அடிக்கலாம்
குற்றுவீர் மங்கையைக் கோரையின் நுனியால்
ஆயினும் சவுக்கால் அடித்த லாகாது
கோல்கொ(ண்)டு திருத்துதல் கூடா தரிவையை.
காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால் 230
பற்றையில் ஒருசிறு குச்சியை ஒடிப்பீர்
மிலாறுவை ஒடிப்பீர் வெங்கான் பள்ளம்
மடிப்பில்மேற் சட்டையில் மறைத்ததைக் கொண்டு
அயல்இல் மனிதர் அறியா(து) வருவீர்;
நச்சினாள் பார்க்கவே குச்சியைக் காட்டுவீர்
ஆசைத்துக் காட்டுவீர் அடித்தல் ஆகாது.
காரிகை இன்னும் கவன மெடாமல்
அவதானம் சற்றும் அவள்கொளா திருந்தால்
கோல்கொண் டவட்கு கூறுவீர் அறிவுரை
மிலாறுவின் கிளையால் நடத்துவீர் பாடம் 240
நான்கு சுவர்களின் நடுவில் நடத்துவீர்
கூறுவீர் பாசியால் **மூடிய அறையிலே
அடித்திடல் புற்றரை மேட்டி லாகாது
அகல்வயற் காட்டிலும் அடித்த லாகாது:
சத்தமும் கிராமம் சாரும் அவ்விதம்
பக்கவீட் டுக்குப் படர்ந்திடும் கலகம்
அரிவையின் அழுகை அயல்வீ டடையும்
குழப்பம் பெரிதாய்க் கொழுங்கா டார்ந்திடும்.
என்றும் தோள்களில் வெப்பம் ஏற்றிடும்
மெல்லியள் பின்புறம் மென்மையா கட்டும் 250
கண்ணிலோர் போதும் தண்டனை ஆகா(து)
அவ்விதம் காதிலும் அறைதலா காது:
திரட்சியாய் ஏதெனும் புருவத் தேற்படில்
கண்களில் நீலமாய்க் கட்டிகள் வந்தால்
மைத்துனர் அதனை வந்தாய்ந் திடுவார்
மாமனார் ஏதெனும் மனத்தெண் ணிடுவார்
கிராமத் துழவோர் இருகண்(ணால்) பார்ப்பார்
நங்கையர் கிராமத்(தில்) நகைப்பரிவ் விதமே:
'சண்டைக் கிவளெங் கேனும் போனளோ
போரில் சமரில் போய்ப்பங் கேற்றளோ 260
அல்லது ஓநாய் அருகுபோய்க் கிழித்ததோ
அல்லது கரடியும் அறைந்ததோ காட்டில்
அல்லது கீறிய ஓனாய் கணவனோ
கணவனே காட்டிக் கரடியா யினனோ?' "
அடுப்பிலே முதியதோர் ஆடவன் இருந்தான்
இருந்தான் தேசாந் திரியவன் கணப்பில்
அடுப்படி முதியவன் அங்கே சொன்னான்
சொன்னான் தேசாந் திரியவன் கணப்பில்:
"ஏழைமாப் பிள்ளாய், இவ்விதம் செய்யேல்,
மாதவள் கருத்து மதிப்புத் தராதீர் 270
மகளிரின் கருத்து **முகிற்புள் நாக்கு
அதிர்ஷ்டமில் பயல்நான் முடித்ததைப் போல!
வாங்கினேன் இறைச்சி வாங்கினேன் ரொட்டி
வாங்கினேன் வெண்ணெய் வாங்கினேன் 'பீரு'ம்
எல்லா வகையாம் நல்மீன் வாங்கினேன்
பலபல சுவையுறும் பல்பொருள் வாங்கினேன்
சொந்தஎன் நாட்டில் தோன்றிய 'பீரு'ம்
அயல்நாட்(டுக்) கோதுமை அதையும் வாங்கினேன்.
ஆயினும் நன்மை(யாய்) ஆனதொன் றில்லை
பயனுள கருமம் செயலெதும் நிகழ்ந்தில; 280
அரிவையும் வீட்டின் அகப்புறம் வந்திடில்
புரிகுழல் பிய்ப்பவள் போல வருவளே
வதனம் மாற்றி மறுவடி வாக்குவள்
உருட்டி விழிகளைத் திரட்டியே நோக்குவள்
ஏசுவள் ஆத்திரம் எப்போதும் கொ(ண்)டே
வெறுப்புறும் வார்த்தைகள் புறப்படும் அக்கணம்
உடலால் பருத்த உலுத்தனென் றழைத்தாள்
மரமண் டையென வார்த்தையால் குரைத்தாள்.
முறையொன்(று) புதிதாய் மூண்டது மனத்தில்
வகையுறக் கண்டனன் மறுவழி யொன்றை: 290
மிலாறுக் கிளையை முறித்தஅவ் வேளை
அருமப் பறவையென் றணைத்திட வந்தாள்;
சூரைச் செடியின் தொடுமுடி யொடிக்கையில்
அன்பே யென்று அவள்தலை குனிந்தாள்;
அலரிச் செடியின் தடியினால் வைக்கையில்
கழுத்தை யணைத்தாள் கட்டி பிடித்தாள்."
பேதையிப் போது பெருமூச்செறிந்தாள்
கடுமூச் செறிந்து களைத்துச் சோர்ந்தாள்
அவள்பின் அழுது விழிநீர் விட்டாள்
உரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 300
"மற்றயோர் புறப்படும் மணிப்பொழு தணைந்தது
மற்றயோர் காலமும் நேரமும் வந்தது
என்புறப் பாட்டு இரும்பொழு தணைந்தது
என்கால நேரம் இங்குவந் தடுத்தது
பிரிந்து புறப்படல் பெருந்துய ராயினும்
விடைபெற் றேகுமிவ் வேளையும் நேரமும்
கீர்த்திகொள் இந்தக் கிராமத் திருந்து
அழகாய் அமைந்தஇவ் வகல்தோப் பிருந்து
வனப்பாய் நானும் வளர்ந்தவிவ் விடத்தில்
இனிப்பாய்ச் சிறப்பாய் எழுந்தவிவ் விடத்தில் 310
வளர்ந்து வந்தஎன் வாழ்நாள் முழுவதும்
குழந்தைப் பருவம் கழித்தநாள் முழுவதும்.
இதற்குமுன் என்றுமே எண்ணிய தில்லை
என்றும்என் வாழ்நாள் நம்பிய தில்லை
இனிவிடை பெறுவனென் றெண்ணிய தில்லை
பிரிந்துபோ வேனெனத் தெரிந்துநம் பியதிலை
அரியஇக் கோட்டையின் அயற்புறத் திருந்து
பரந்த இம்மேட்டின் படர்புயத் திருந்து;
இப்போ நினைக்கிறேன் என்விடை பெறலை
இப்போ(து) பிரிந்து ஏகல்நம் புகிறேன் 320
வெறுமையா யினபிரி யாவிடைச் சாடிகள்
விடைபெறும் 'பீரு'ம் முடிந்தது குடித்து
வண்டியும் விரைவில் வழிதிரும் பிடலாம்
முன்புறம், வெளியே பின்புறம் வீட்டே
ஒருபுறம் தந்தையின் உயர்களஞ் சியவறை
மறுபுறம் தொழுவம் வழிபார்த் திருக்கும்.
இப்போ(து) பிரிந்துநான் எதைக்கொண் டேகுவேன்
பேதைப் பெண்நான் பிரிவிடைச் செல்கையில்
தாய்ப்பால் விலைக்குத் தருவது எதைநான்
அத்துடன் தந்தையார் ஆற்றுநன் மைக்கெலாம் 330
சகோதரன் அன்புக்(கு) தருவது எதுகொல்
சகோதரி காட்டிய கனிந்த பண்புக்கு?
தந்தாய், உமக்குச் சாற்றுவேன் நன்றி
முன்னாள்(என்) வாழ்வு முழுதும் மகிழ்ந்ததால்
சென்றநாட் களில்நான் உண்டஊண் அதற்கு
சிறப்பாய்க் கிடைத்த சிற்றுண்(டி) வகைக்கு.
தாயே, உமக்குச் சாற்றுவேன் நன்றி
இளமைதா லாட்டில் எனைவளர்த் ததற்கு
ஏந்தியே சிறுநாள் எனைவளர்த் ததற்கு
முலைப்பா லுட்டி முன்வளர்த் ததற்கு. 340
சோதரா, அடுத்துநான் சொல்லுவேன் நன்றி
என்னருஞ் சோதரா, என்னருஞ் சோதரி,
குடும்பத் தோர்க்கெலாம் கொடுப்பேன் திருப்பி
என்னோடு வளர்ந்த எல்லா ருக்கும்
என்னோடு வாழ்ந்த எல்லா ருக்கும்
வாழ்வில் கூடிநான் வளர்ந்தஎல் லார்க்கும்.
என்இன் தந்தையே இப்போ(து) வேண்டாம்
என்அன் பன்னையே இப்போ(து) வேண்டாம்
என்பெருஞ் சுற்றத்து எவருஞ்செய் யாதீர்
இரும்புகழ் பெற்றஎன் இனசனக் கணத்தில் 350
மனதிலே யாருமே வருத்தம் கொள்ளாதீர்
இனிப்பெரும் துயருக்கு இடம்கொடுக் காதீர்
வேறொரு நாடுநான் ஏகவிருப் பினும்
பிரிந்து புறப்பட்டுப் போக விருப்பினும்!
இயற்றியோன் பருதி என்றுமே ஒளிரும்
இயற்றியோன் மதியும் என்றுமே திகழும்
சுவர்க்கத்து விண்மீன் சுடரும்எப் போதும்
விரிந்தெங்கும் பரவும் விண்மீனின் கூட்டம்
விண்ணின்வே றேயோர் விரிபக் கத்திலும்
வையத்தின் வேறோர் வளர்பக் கத்திலும் 360
தந்தையார் முற்றம் தனில் மட்டுமல்ல
வளர்ந்தஎன் தோட்டம் மட்டுமே யல்ல.
இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
அன்பாய்நே சித்த அகத்தினி லிருந்து
தந்தையார் அமைத்தவித் தனியகத் திருந்து
கருணையன் னையின்நிறை களஞ்சியத் திருந்து;
என்சதுப் புத்தரை எழில்நிலம் விடுகிறேன்
என்புற் றரைமேட் டியைபுவி விடுகிறேன்
என்வெண் புனல்விட் டிங்கே பிரிகின்றேன்
மணல்நிறை என்புனல் வளர்கரை விடுகிறேன் 370
கிராம மதில்வாழ் கிழவிகள் குளித்திட
மந்தைமேய்த் திடுமிடை மாந்தர்கள் சிந்திட.
சதுப்பு நிலத்தை மிதித்திடு வோர்க்கும்
அலைந்திடு வோர்க்கும் நிலங்கள் விடுகிறேன்
இளைப்பாறி ஏகுவோர்க் கிரும்**பூர்ச்ச மரங்களை
உலாவித் திரிவோர்க் குயர்பைம் புற்றரை
அடிவைத்(துத்) திரிவோர்க் ககல்வே லிப்புறம்
பயணித்துச் செல்வோர்க்(கு) பாதைமூ லைகளை
நடந்தோடிச் செல்வோர்க்(கு) நல்லநீள் முற்றம்
நெடுஞ்சுவர்ப் பக்கம் நிற்போர்க்(கும்) விடுகிறேன் 380
சுத்தம்செய் வோர்க்கு நிலத்தடிப் பலகையை
பெருக்கிவைப் போர்க்கு பெருந்தரைப் பகுதியை
கலைமான் ஓட வயல்களை விடுகிறேன்
**சிவிங்கிகள் திரியத் திகழ்வனப் பகுதிகள்
வாத்துகள் வாழ வளமார் புல்வெளி
பறவைகள் ஓய்வுறப் பாங்குள சோலைகள்.
இப்போ(து) புறப்பட் டிங்கிருந் தகல்வேன்
புறப்பட் டேகும் பிறிதொரு துணையொடு
இலையுதிர் கால இரவணைப் புக்கு
பசிய வசந்தப் பனித்திண் பரப்பு(க்கு) 390
பனித்திண் மத்திலே படிசுவ டெதுமிரா(து)
பாதைப் பரப்பினில் பாதச் சுவடிரா(து)
பாவாடை நூலிழை பனித்துளி களிலிரா(து)
ஆடைக் கரைச்சுவ(டு) அப்பனி யிலேயிரா(து).
பின்னர்நான் திரும்பிப் பிறந்தஇல் வருகையில்
விருந்தாளி யாயென் வீடு வருகையில்
என்தாய்க் குக்குரல் எதுவுமே கேளா(து)
அழுமொலி தந்தை அறியவும் வாய்ப்பிலை
மூலையில் நின்றுநான் முனகிப் புலம்பினும்
அவர்களின் தலைமுன் னாலே பாடினும்; 400
இளையபுல் மேடு எழுந்துயர்ந் திருக்கும்
சூரையின் நாற்று துளிர்த்துயர்ந் திருக்கும்
எனைவளர்த் தவளின் இதவுடல் தோலிலே
எனைச்சுமந் தவளின் எழில்முகப் பரப்பிலே.
பின்னர்நா னிங்கு பெயர்ந்திடும் வேளை
மிகநீண் டகன்று விரிந்தவிம் முன்றிலில்
அடுத்தவர்க் கென்னை அறிமுக மிராது
ஆயினும் என்னையே அறியுமிவ் விருபொருள்
ஒன்று வேலியில் தாழ்வரிச் சுமரம்
வயல்வெளித் தூர(வேலி) மரம்மற் றொன்று 410
சிறுமியாய் இருக்கையில் சீராய் நட்டவை
கன்னிகை யானபின் கைபட நட்டவை.
வளர்த்தனள் அன்னை மலட்டுஆ அறியும்
அதற்குநீர் இளமைப் பருவத் **தருத்தினேன்
கன்றா யிருக்கையில் கவனமாய் வளர்ந்துளேன்
கண்டால் கிட்டக் கதறியோ டிவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அப்பசு வெனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென. 420
தந்தையின் கிழட்டுத் தனிப்பொலிக் குதிரை
உணவதற் கூட்டிய(து) உண்டிள வயதில்
அளித்துளேன் புல்ஊண் அரிவையா யானபின்
கண்டால் அருகே கனைத்தோடி யேவரும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
என்றுமப் பரிதான் எனையே அறியும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.
நித்திய வயதில் நற்சோதரன்நாய்
ஊட்டிவந் ததுவூண் உண்டிளம் பருவம் 430
கற்பித்த துண்டு கன்னிகை யானபின்
கண்டால் குரைக்கும் கடிதிலே யருகுறும்
குப்பை நிறைந்த தோப்பின் மேட்டில்
குளிர்அடர்ந் திருந்த குளிர்கால நிலத்தில்
அந்தநாய் எனையே அறியு மெப்போதும்
இந்தவில் லத்திலே இருந்ததோர் மகளென.
ஏனைய எவையும் எனையறி யாவே
திரும்பிநான் என்இல் சேரும்வே ளையிலே
தோணிகள் கரைபுகும் தொல்லிட மாயினும்
முன்னர்நான் வாழ்ந்தஇந் நன்னிட மாயினும் 440
வெண்ணிற மீனினம் விளையாடி யேவரும்
பலவலை விரியும் பரந்தநல் இடத்திலும்.
விடைபெறு கின்றேன், வீடே, போய்வர!
பலகைகள் கூரை பரப்பிய இல்லமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.
வாயிற் கூடமே, போய்வர விடைதா!
பலகைகள் பரப்பிப் பதித்தமண் டபமே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம். 450
முன்றிலே, போய்வர முழுவிடை பெறுகிறேன்,
நிறைந்த பேரி வளர்ந்துள முன்றிலே!
மீண்டிங்கு வருதல் மிகநல மாகும்
நடைது(ள்)ளிப் பயிலல் நற்றிறச் செயலாம்.
அனைவரும் நல்விடை அருளினீர் போய்வர,
நிலத்தும், சிறுபழம் நிறைவனத் திருந்தும்
மலர்ந்திடும் பூக்கள் வழிகரை யிருந்தும்
பசும்புல் வளர்புதர்ப் பற்றையி லிருந்தும்
நூறுபல் தீவுகொள் ஏரிகளி லிருந்தும்
நிதம்வெண் மீனுலா நீரிணை யிருந்தும் 460
ஊசி யிலைமர உயர்மே டிருந்தும்
மிலாறுவின் தழைகிளை முழுதிலு மிருந்தும்!"
அப்போ(து) கொல்லன் அவன்இல் மரினன்
வனிதையைப் பற்றினன் வண்டியி லேற்றினன்
சாட்டையால் குதிரையைச் சாடி யடித்தனன்
உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:
"ஏரிக் கரைகளே, இதோவிடை பெற்றேன்!
ஏரிக் கரைகளே, எழில்வயல் எல்லைகாள்!
உயர்மலை வளர்ந்த ஊசி(யி)லை மரங்காள்!
தாருவின் தோட்டத்து நீடிய மரங்களே! 470
வீட்டின் பின்**சிறு மிகுபழச் செடிகளே!
பாதைக் கிணற்றடிச் சூரைச் செடிகளே!
தரையெலாம் பரந்த சிறுபழக் காம்புகாள்!
சிறுபழக் காம்புகள் திகழ்புல் தாள்களே!
அலரிப் புதர்களே, அலர்தாரு வேர்களே!
பூர்ச்சந் தழைகளே, பொன்மிலா றுரிகளே!"
அதன்பின் கொல்லன் அவன்இல் மரினன்
வடபால் முற்ற மதைவிட் டகன்றான்
பிள்ளைகள் நின்று பிரிபாட் டிசைத்தனர்
சிறார்கள் இசைத்துச் செப்பினர் இவ்விதம்: 480
"இனியதோர் கரும்புள் இவ்வழிப் பறந்தது
வியன்வனத் தூடாய் விரைந்தே பறந்தது
வாத்தையெம் மிடத்தால் மயக்கிப் பிரித்தது
வளர்சிறு பழத்தினை மருட்டிப் பறித்தது
அப்பிளை எம்மைவிட் டதுஎடுத் தகன்றது
புனல்மீ னெடுத்தது போட்டது தரையிலே
சிறுபணம் காட்டி அவளைஏ மாற்றிய(து)
வெள்ளிப் பணத்தினால் வஞ்சக மிழைத்தது;
யாரெமை யிப்போ(து) நீர்க்கொண் டேகுவார்?
ஆற்றிடைப் படுத்த ஆர்தான் இங்குளார்? 490
தண்ணீர்க் கலயம் தாம்ஓய்ந் திருக்குமே
**காவுதண் டங்கள் சோர்வடைந் திருக்குமே
பலகைகள் துடைக்கப் படாதங் கிருக்குமே
நிலம் பெருக்காமல் நலமற் றிருக்குமே
**குவளை விளிம்புகள் அழுக்கடைந் திருக்குமே
கைப்பிடிச் சாடியில் கறைபடிந் திருக்குமே!"
அவனே கொல்லன் அவ்வில் மரினன்
தன்பரு வத்துத் தையல் தன்னுடன்
தனது வழியில் தான்விரைந் தேகினன்
வடபால் நிலத்து வளர்கரைப் பாதையில் 500
நறைபோல் இனிய நிறைநீ ரிணைவழி
மணல்நிறை மேட்டை வாகாய்க் கடந்து;
சிறுகல் சலசல மணல் கலகலக்க
வண்டி உருண்டது வளர்வழி ஒளிர்ந்தது
பரியதன் இரும்புப் பட்டி ஒலித்தது
மிலாறுவின் சறுக்கு வில்கட கடத்தது
வளைந்த சலாகை மரம் படபடத்தது
பழமரப் பட்டம் முழுதா யசைந்தது
சாட்டையின் சுழற்சியில் சதாஒலி எழுந்தது
செப்பிலாம் வளையம் சேர்ந்தே யசைந்தது 510
உயர்குலப் புரவி ஓடிய போதினில்
வெண்சுட்டிப் புரவி விரைந்தவே ளையிலே.
ஒருநாள் சென்றனன் இருநாள் சென்றனன்
மூன்றாம் நாளும் முன்விரைந் தேகினன்
கையொன் றுபரிக் கடிவ()ளம் பிடித்தது
மறுகை மங்கையின் மருங்கினை யணைத்தது
ஒருகால் வண்டியின் ஒருபுறத் திருந்தது
தளவிரிப் பின்கீழ் மறுகால் இருந்தது
பரியும் விரைந்தது பயணம் தொடர்ந்தது
நீள்நாள் கழிந்தது நெடுந்தொலை குறைந்தது 520
மூன்றா வதுநாள் முன்வரும் போதினில்
சூரியன் கீழே தொடர்ந்துசெல் நேரம்
கொல்லனின் இல்லம் நல்விழித் தெரிந்தது
*இல்மா(வின்) இல்லமும் எதிர்த்தோன் றியது:
நூலிழை போல மேலெழுந் ததுபுகை
தடித்த புகையும் தான்வெளிப் போந்தது
இல்லதன் உட்புறத் திருந்தே வந்தது
மேகத்தை நோக்கி மேலெழுந் ததுவே.